ஒரு கையெழுத்துக்கு ரூ.6,000! வசமாக சிக்கிய விஏஓ

 
arrest

சிதம்பரம் அருகே 6,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தேர் விஜயன் (வயது 50). இவருக்கும், இவரது அண்ணன் அருள்பிரகாசத்திற்கும், மற்றொரு அண்ணன் வேல்முருகன் என்பவர் தானமாக தரசூர் கிராமத்தில் உள்ள நிலத்தை வழங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய தேர் விஜயன், விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் பட்டா மாற்றம் தொடர்பாக வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் (28), பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுத்து விடுமாறு, அங்கிருந்த கிராம உதவியாளர் ரமேஷ் (49), தேர்விஜயனிடம் கூறினார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தேர் விஜயன், கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை சதிஷ்குமாரிடம் கொடுப்பதற்காக தேர் விஜயன் நேற்று வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த சதிஷ்குமார், லஞ்ச பணம் ரூ.6 ஆயிரத்தை கிராம உதவியாளர் ரமேஷ் மூலமாக வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார், அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், பணியில் சேர்ந்து 4 மாதங்கள் மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.