மதுபோதையில் நண்பர்களிடையே மோதல்.. 2 பேரை கத்தியால் குத்திய இளைஞர்..
சென்னை திருவான்மியூரில் மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் செய்ய துணிவதும், கொலை செய்யப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள நடுக்குப்பம் மீனவ பகுதியில் நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்று கொலை சம்பவமாக மாறியிருக்கிறது. நண்பர்களான தினேஷ் ( 22) , சதீஷ்குமார் (27) மற்றும் அருண் ( 22) ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் மதுபோதையில் இருந்ததால் , வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் அருணும், சதீஷ்குமாரும் தினேஷை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், அருகிலுள்ள வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்து இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். போதையில் நண்பர்களை கொலை செய்த தினேஷ், பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுகுப்பம் பகுதியில் நடைபெற்ற 16-ம் நாள் துக்க நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டதாகவும், அப்போது சாப்பாட்டில் மண் விழுந்ததை தட்டிக்கேட்ட போது மோதல் ஏற்பட்டு, பின்னர் கொலையாக மாறியதும் தெரியவந்துள்ளது.