இனி அண்ணாமலையாரை தரிசிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் - கலெக்டர் அறிவிப்பு..

 
திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க ஆதார் அவசியம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய  2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10,978 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் திருவண்ணாமலையில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை  246 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும்  கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 10.01.2022  (திங்கள்கிழமை) முதல் தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே,  திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.  

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது!

சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியதற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.  தற்போது நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தோற்று அதிக அளவில் பரவாமல் இருக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். “ என்று குறிப்பிட்டுள்ளார்.