சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகள் ரத்து; மேலும் 2 வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

 
cv shanmugam

தமிழக அரசு தொடர்ந்த நான்கு அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் இரண்டு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இரண்டு வழக்குகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Highcourt

12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி முதல்வரை தாக்கியோ, நேரடியாகவோ பேசவில்லை என்றும், தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப்பெறும்போது, தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும் என வாதிட்டார். அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வதாக குற்றம்சாட்டினார். அப்போது நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

பாஜக கூட்டணியால் அதிமுக தோல்வி: சிவி சண்முகம் கிளப்பிய சர்ச்சை

அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசையும் முதல்வரையும் விமர்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசிவிட்டு, நேரடி தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நீதிபதி இந்த நான்கு வழக்குகளில் இன்று  தீர்ப்பளித்தார். அதில் தொழிலாளர் சட்ட திருத்தம் குறித்தும், மோசடி அரசு என பேசியது குறித்தும் தொடரப்பட்ட இரு அவதூறு வழக்குகளை ரத்து செய்ய மறுத்த நீதிபதி மற்ற இரு வழக்குகளை ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளார் .