சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் கைது!

 
Sivakasi

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டியை சேர்ந்த கடற்கரை என்பவர் ஊராம்பட்டி என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இவரது பட்டாசு ஆலையில் ஊராம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல் நேற்று காலை தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், திடீரென உராய்வு காரணமாக பட்டாசு வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த இருளாயி (வயது48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் மாட்டிக்கொண்டனர். இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார். 
 
இந்நிலையில், சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக ஊராம்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளர் கடற்கரை, போர்மென் காளியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.