தமிழக காவல்துறையில் ஃபர்ஸ்ட் டைம்... உளவுத்துறை ஐஜியாக பெண் அதிகாரி - முதல்வருக்கு குவியும் பாராட்டு!
தமிழ்நாட்டில் நேற்று 30 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 18 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறையில் டிஐஜியாக இருந்தவர் தற்போது ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதில் என்ன சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? உளவுத்துறையில் ஐஜியாக பொறுப்பேற்கும் முதல் பெண் அதிகாரி இவர் தான். தமிழ்நாடு காவல் துறை வரலாற்றில் இதுவே முதன்முறை.
இதற்கு முன்னதாக உளவுத் துறையில் டிஐஜியாக முதன்முறை பொறுப்பேற்ற பெண் அதிகாரியும் இவர்தான். ஆசியம்மாள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கு கொங்கராயக் குறிச்சி என்ற கிராமத்தில் பிறந்தார். போதிய வசதிகளின்றி படித்து வளர்த்தவர். எம்.எஸ்.சி, எம்.டெக் மற்றும் எம்பிஏ ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறையில் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தார். வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக காவல் துறையில் அடியெடுத்து வைத்தார்.
பின்னர் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு, உளவுத்துறையின் எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் எஸ்.பியாக பணி புரிந்துள்ளார். 2018ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற இவர், போலீஸ் பயிற்சிப் பள்ளி மற்றும் தொழில்நுட்ப பிரிவில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் உளவுத்துறையின் டிஐஜியாக கடந்த மே மாதம் ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது இவருக்கு ஐஜி பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆசியம்மாள் வயது 56. இவர் நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்பட்டவர். அதேபோல் உளவு துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்க கூடியவர். தமிழ்நாடு காவல் துறை வரலாற்றில் பெண் அதிகாரி ஒருவர் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டிருப்பது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அனைவரும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.