அதிமுக அலுவலக கலவரத்தில் ரூ.19 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்! 70 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

 
admk office attack

அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்  ஆதரவாளர்கள் 70 பேரின் முன் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் ஈபி.எஸ் ஆதரவாளர்கள் 200பேர் மீதும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீது என மொத்தம் 400 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக ஈ.பி.எஸ். தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட  43 பேரும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக இரு தரப்பு மோதலில் ரூ.19,35,834 மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பொது அமைதிக்கு பாதிப்பு. பள்ளிகள், கடைகள் மூடல். பொதுமக்கள் பாதிப்பு. இரு தரப்பிற்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது, விசாரணை ஆரம்ப கட்டம். மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி அல்லி, ராயப்பேட்டை காவல் நிலைய வழக்கில் ஈ.பி.எஸ். தரப்பின் மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜராம், விருகை ரவி, தியாகராயநகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 43 பேர் மற்றும் ஓ.பி.எஸ். தரப்பு 27 பேர் என 70 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.