தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் - தினகரன்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அம்மா முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் அபாயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் தாக்குதல் நடத்தப்படும் போதும் வெறும் கடிதம் மட்டுமே எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மீனவர்கள் நலனை காக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தயங்குவது ஏன்?
ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.