தீபாவளியை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் நவம்பர் மாதத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் MGFA ஜாஃபர் அலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 150 சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. வழக்கமான ரயில்கள் தவிர்த்து கூடுதலாக 150 ரயில்களை இயக்க ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது. சிறப்பு ரயில்களில் அக்டோபர் 13 - 26 மற்றும் நவம்பர் 17 - டிசம்பர் 1 வரை பயணிக்கும் ரயில்வே பயனாளர்களுக்கு 20 சதவீதம் சலுகை வழங்கப்படவுள்ளது. மக்களின் தேவைக்கேற்ப 2,500 பொது பெட்டிகள் தயாரிக்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
2014 முதல் 2025 ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரால் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்திய ரயில்வே துறை மண்டலங்களில் தெற்கு ரயில்வேக்கு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ( சென்னை - கோவை - மதுரை), தெற்கு மத்திய ரயில்வே - 48 சிறப்பு ரயில்கள் ( ஹைதராபாத் - செகந்திராபாத் - விஜயவாடா), கிழக்கு மத்திய ரயில்வே - 14 சிறப்பு ரயில்கள் ( பீஹார் - கயா - தர்பங்கா), கிழக்கு ரயில்வே - 24 சிறப்பு ரயில்கள் ( கோல்கட்டா - ஹவுரா), மேற்கு ரயில்வே - 24 சிறப்பு ரயில்கள் ( மும்பை - சூரத் - வதோதரா). 4 அம்ரித் பாரத் சிறப்பு ரயில்கள் தீபாவளி ஒட்டி பயன்பாட்டுக்கு வருவது குறித்தும் ரயில்வே துறை மூலம் அறிவிப்பு வெளியாகும். ஆஸ்திரேலியா, கனடாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகளை இந்தியா தான் தயாரித்து கொடுக்கிறது. வழக்கமான ரயில்கள் இல்லாமல், தெற்கு ரயில்வேக்கு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வழக்கமான ரயில்கள் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரயில்கள் குறைவாக உள்ளது” என்று கூறினார்.

