சிதம்பரம் நடராஜர் கோயில் மீது 14,098 புகார்கள்.. - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு..

 
சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயில்  குறைபாடுகள் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளர் 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில்

கடலூரில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் கடந்த 7, 8ம்  தேதிகளில் அறநிலையத்துறை சிறப்பு அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.  சிறப்பு அதிகாரி  சுகுமாரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டபோது, தீட்சிதர்கள்  ஒத்துழைப்பு வழங்கவில்லை. வரவு செலவு கணக்குகளையும் காட்ட மறுத்துவிட்டனர். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை, பொதுமக்களிடம்  சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டது. அதன்படி  கடந்த மாதம் 20 மற்றும் 21  ஆகிய தேதிகளில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 19,405 புகார் மனுக்கள் பெறப்பட்டன.  அவற்றுள் 14,098 மனுக்கள் திருக்கோவில் நிர்வாகத்தின் மீது குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் மீது 14,098 புகார்கள்.. - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு..

அதிலும்  சிதம்பரம்  நடராஜர் கோவில் மீது 28 முக்கிய புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.  அதில் பெண்களை மரியாதை குறைவாக நடத்துவது,  குழந்தை திருமணம் நடத்துவது,  மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவித வசதியும்  செய்து தரப்படவில்லை, ஆண்டாள் சிலையை  மறைத்து வைத்துள்ளது  மற்றும்  கோயிலுக்கு வரும் பக்தர்களை தரக்குறைவாக நடத்துவது போன்ற புகார்களும் இடம்பெற்றுள்ளன.  இந்நிலையில்  சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து  மனுக்களில் சொல்லப்பட்டுள்ள குறைபாடுகள் பற்றி தகுந்த விளக்கம் அளிக்க சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளர்க்கு இந்து சமய அறநிலையத்துறையின் விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.   15 நாட்களுக்குள் இந்த புகார்கள் தொடர்பாக  சிரம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.