சாதி கயிறு கட்டும் மோதலில் மாணவன் உயிரிழப்பு: 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு!!
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் - உச்சிமாகாளி தம்பதி. இவர்களுக்கு செல்வ சூர்யா என்ற மகளும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர். செல்வ சூர்யா இடைகாலை அடுத்த பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 25ஆம் தேதி செல்வ சூர்யாவுக்கும், அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இடையே சாதி கயிறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் செல்வசூர்யாவை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் உடனடியாக செல்வசூர்யா அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு தலை வலி அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மீது பாப்பாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாதிக்கயிறு மோதல் தொடர்பாக 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.