தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது - அன்புமணி கண்டனம்!!

 
anbumani

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை சிங்களப் படைகள்  கைது செய்துள்ளன.  அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

fisher

சிங்களப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது!  காரைக்கால் கடற்கரையிலிருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் காற்றோட்டம் காரணமாக கோடியக்கரை பகுதியிலிருந்து கச்சத்தீவுக்கு அருகில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனாலும் கூட அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்லாத நிலையில் அவர்களை சிங்களப் படை சிறைபிடித்திருக்கிறது! 



கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள ஏழாவது கைது இதுவாகும். இதுவரை மொத்தம் 60 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 22-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள்  தாயகம் திரும்பும் முன்பே அடுத்த கைது அரங்கேறியுள்ளது! கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுடன் மீட்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன்! " என்று குறிப்பிட்டுள்ளார்.