திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கூறி திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அருகே விழுஞ்சியம் துறைமுகம் கடற்கரைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகத்துக்கு உரிய படகு ஒன்று நின்றது. இதை ஆய்வு செய்தபோது அதிலிருந்து 300 கிலோ ஹெராயின் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 20 பேரை கைது செய்தனர். இதில் 16 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இது தொடர்பான சோதனை நடத்தப்பட்ட போது செல்போன்கள் ,லேப்டாப்கள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த பொருட்கள் மூலம் பல்வேறு ஆதா,ரங்கள் கிடைத்திருப்பதாக கூறி இலங்கையை சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜ், கோட்டைக்கா மணி தனுஷ்கா ரேஷன் ,கென்னடி பெர்னான்டோ, முகமது அனீஸ், திலீபன் ,சுரங்கா, லதியா ,செல்வராஜ் ,அஜித்தா ,நோயல் குமார் உள்ளிட்ட 11 பேரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 11 பேரிடம் விசாரிக்க இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி இளவழகன் 11 பேரையும் 17 ஆம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். போலீஸ் காலில் எடுத்து விசாரித்த பின்னர் இவர்கள் மீது புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.