ரூ.45 கோடி சொத்து குவிப்பு.. கே.பி.அன்பழகன் மீது 10,000 பக்க குற்றப்பத்திரிக்கை..

 
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

அ.தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் மீது 10,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் வருமானத்துக்கு அதிகமாக  ரூ.11.32 கோடி  சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, கேபி அன்பழகன் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு  செய்து  லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்தது.

நீதிமன்றம்

இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரது வீட்டிலும் சோதனை செய்து, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், புகார் தாரர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில், கே.பி.அன்பழகன்  சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இந்த வழக்கின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்பேரில்  லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை முடித்து, இன்று காலை 10 மணிக்கு தருமபுரி நீதிமன்றத்தில் 10,000குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.  அதில்,  58 இடங்களில் நடந்த சோதனை, விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ரூ.45 கோடி சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அன்பழகன் தனது பெயரிலும், உறவினர்கள் பெயரிலும்  வருமானத்துக்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.