ஞானசேகரன் திருடி விற்ற 100 சவரன் நகைகள் பறிமுதல்

 
கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஞானசேகரன் கொடுத்த தகவல் அடிப்படையில் 2 நகை வியாபாரிகளிடமிருந்து 100 சவரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை, திருட்டு வழக்குகள் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.  பள்ளிக்கரணையில் 7 திருட்டு வழக்குகளில்( 200 சவரனுக்கு மேல் திருடியதாக )தான் ஈடுபட்டதாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீசார் அந்த வழக்குகளில் கைது செய்துள்ளனர்.


தொடர்ந்து, ஞானசேகரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் இரண்டு நகை வியாபாரிகளிடமிருந்து 100 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வேறு சில வியாபாரிகளிடம் விற்ற நகைகளையும் பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை விற்று வாங்கிய ஜீப்பை கிண்டியில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் ஞானசேகரன் விட்டு வைத்திருந்தார். நேற்று மாலை போலீசார் ஞானசேகரனை கிண்டிக்கு அழைத்துச் சென்று சர்வீஸ் சென்டரில் இருந்த ஜீப்பை பறிமுதல் செய்தனர்.

Image

கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் ஒரே தவணையாக 18 லட்ச ரூபாய் கொடுத்து இந்த ஜீப்பை வாங்கியதும் தெரிய வந்துள்ளது.தாம்பரம் மாநகர காவல் எல்லை மட்டுமின்றி, சென்னை புறநகரில் வேறெங்காவது கைவரிசை காட்டியுள்ளாரா எனவும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.