புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 100 கனஅடி நீர் திறப்பு..

 
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 100 கனஅடி  நீர் திறப்பு..


தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி  வருகின்றன. இந்தநிலையில், இன்று காலை முதல் ஆங்காங்கே கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. ஆகையால்  இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 24 அடியில், தற்போது 20.65 அடியாக நீர் இருப்பு உள்ளது.  இதேபோல் புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கனஅடியில், தற்போது 2692 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.  

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 100 கனஅடி  நீர் திறப்பு..

இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து,  முதல் கட்டமாக மாலை 100 கனஅடி உபரிநீரை வெளியேற்றும்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் உத்தரவிட்டனர்.  அதன் அடிப்படையில் பிற்பகல் 3 மணியளவில்  செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தலா 100 கன அடி நீர்  திறக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்துக்கு ஏற்ப, வெளியேற்றப்படும்  உபரிநீரின் அளவை அதிகரித்து  கொள்ளலாம் என பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 100 கனஅடி  நீர் திறப்பு..

இதனையடுத்து  புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டிய நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அந்தந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்கிக் கொள்ளலாம் என ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் உயர்ந்து வரும் நீர்மட்ட அளவை பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள்  தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.