10% இடஒதுக்கீடு : அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதல்வர்..
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 12-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று கூறியிருந்தார். மேலும் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட நங்கில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி., வில்சன் , தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.