சிவகாசியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

 

சிவகாசியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

விருதுநகர்

சிவகாசியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாராணாபுரம் சாலையில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது . இந்த ஆலையின் ஒரு பகுதியில் நேற்று இயந்திரங்கள் மூலம் தீக்குச்சி தயாரிக்கும் பணி நடந்து வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, தீ பற்றி எரிய தொடங்கியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

சிவகாசியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

இதனையடுத்து, ஆலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து ஆலை உரிமையாளர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.