சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே மாமனார், மாமியார் கொடுமைப் படுத்தியதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள செய்காத்தூரை சேர்ந்தவர் மல்லுதுரை. இவரது மகள் முத்துலட்சுமி (36). இவருக்கும், தென்காசி மாவட்டம் கூடலூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், குடும்ப சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக முத்துலெட்சுமிக்கும், அவரது மாமனார் தங்கப்பாண்டி – மாமியார் வெள்ளத்தாயி ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி அன்று மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், தங்கபாண்டியும், வெள்ளத்தாயியும் சேர்ந்து, மருமகள் முத்துலெட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

இதனால் மனமுடைந்த முத்துலெட்சுமி, வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, முத்துலெட்சுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார், தங்கபாண்டி மற்றும் அவரது மனைவி வெள்ளத்தாயி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.