செல்ஃபோன், லேப்டாப், டேப்லெட்களுக்கு இனி ஒரே ஜார்ஜர் - நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு..
அனைத்து விதமான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜரை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு போன், ஐ-போன் , டேப்லெட், லேப்டாப் போன்ற ஒவ்வொரு மின்னணு சாதனங்களுக்கும் வெவ்வேறு சார்ஜரை பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்து வருகிறது. அதனால் நுகர்வோர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், மின்னணு கழிவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை ( டைப் சி) கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இதுபோன்ற திட்டங்களுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் அதற்கான சாத்திய கூறுகளை ஆராய வேண்டும் என மத்திய அரசு தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகை சார்ஜரை கொண்டு வருவது குறித்து ஆராய நிபுணர்கள் குழு ஒன்று அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய ரோஹித் குமார் சிங், சார்ஜர் தயாரிப்பில் இந்தியாவிற்கு முக்கியமான இடம் உள்ளதாகவும், அனைத்து சாதனங்களுக்கும் ஒரே ஒரு சார்ஜரை தயாரிப்பது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கு முன் தொழில் துறையினர், வாடிக்கையாளர்கள், உற்பத்தியாளர்கள் என அனைவரது கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருப்பதாக குறிப்பிட்டார். அதே நேரத்தில் மின்னணு கழிவு பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய அவசியத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மின்னணு சாதன உற்பத்தியாளர்கள், துறை சார்ந்த சங்கங்கள், தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் தொழில்நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.