ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க குழு அமைப்பு

 

ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க குழு அமைப்பு

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் , அவர்களிடம் ஆபாசமாக பேசி புகைப்படங்களை அவர்கள் செல்போனுக்கு அனுப்பியதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த பிரச்னை பூதாகரமாகிவிட்டது.

ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க குழு அமைப்பு

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், இணைய வழியில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளை ரெக்கார்ட் செய்யப்படவேண்டும் எனவும் இதை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்கக இயக்குநர், கணினி குற்ற தடுப்பு பிரிவு, காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக கடந்த சுமார் ஓராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க குழு அமைப்பு

சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் மற்ற பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும் மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும், இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக் கல்வித் துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குநர், கணினி குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது “போக்சோ” சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு help line எண் உருவாக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.