கணவனுடன் சண்டை… ஏரியில் குதித்து உயிரைவிட்ட ஆசிரியை… 8 மாத குழந்தையை தேடும் போலீஸ்!- சென்னையில் நடந்த சோகம்

 

கணவனுடன் சண்டை… ஏரியில் குதித்து உயிரைவிட்ட ஆசிரியை… 8 மாத குழந்தையை தேடும் போலீஸ்!- சென்னையில் நடந்த சோகம்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஆசிரியை ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது 8 மாத குழந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த சேக்காடு, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (30) டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (25). இவர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்து குழந்தைகள் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் 7ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரோக்கியா (5), நிக்கிதா (2), தபிதால் என்ற 8 மாத பெண் குழந்தை என மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மனைவியை அடிக்கடி கெட்ட வார்த்தைகளால் பாலாஜி திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் புவனேஸ்வரி தனது 8 மாத குழந்தையுடன் 25ம் தேதி மாயமானார். இந்த நிலையில் சேக்காடு, கோவிந்தன் தாங்கல் ஏரியில் நேற்று பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

கணவனுடன் சண்டை… ஏரியில் குதித்து உயிரைவிட்ட ஆசிரியை… 8 மாத குழந்தையை தேடும் போலீஸ்!- சென்னையில் நடந்த சோகம்

பாலாஜியின் உறவினர்களை அழைத்து விசாரித்தபோது இறந்தது புவனேஸ்வரி என்பது தெரியவந்தது. மேலும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், குழந்தை ஏரியில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடினர். ஆனால் புவனேஸ்வரியின் 8 மாத குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆவடி சரக காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் அவரது மொபைல்போன் எண்ணையும், அந்தப் பகுதி கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஆசிரியை ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.