“காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை” தமிழக அரசு எச்சரிக்கை!
காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் ஒருவாரம் கடும் ஊரடங்கு பின்பற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் பொதுநலன் கருதி இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை கடைகள் திறந்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே மக்கள் காய்கறி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அத்துடன் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாவதால் தமிழகத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ரூபாய் 50 ஆகவும் உருளைக்கிழங்கு 30-லிருந்து 60 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
இது குறித்து உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் , காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . உயர்த்தப்பட்ட விலையை வியாபாரிகள் உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அதேபோல் இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மக்களை சுரண்டும் செயல் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.