ராமநாதபுரம்- ஆன்லைன் வகுப்பு என்று ஆண்களுடன் அரட்டை அடித்ததாக சந்தேகம்! மனைவியும், மாமியாரும் கழுத்தறுத்து கொலை
ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த மனைவி ஆண்களுடன் அரட்டை அடிப்பதாக சந்தேகப்பட்டு கொலை செய்த கணவன், மாமியாரையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரமக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்து மேலபெருங்கரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி இந்திராணி. கருப்பையா கடந்த 30 வருடங்களுக்கு முன்பு உடல்நலகுறைவால் இறந்து விட்டதால், மகன் உலகநாதனுடன் பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து விட்டார் இந்திராணி.
இந்திராணி தம்பி செல்லதுரைக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி கலைச்செல்வி சென்னையில் வசித்து வருகிறார். சொந்த அக்கா மகனான இந்திராணியின் மகன் உலகநாதனுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மகள் பவித்ராவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர் செல்லத்துரை – கலைச்செல்வி தம்பதியினர்.
மாமியார் கலைச்செல்வி கடந்த சில மாதங்களாக மருமகன் உலகநாதன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
உலகநாதன் தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வலிப்பு நோய் காரணமாக அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லாத நிலையில், குடும்பத்தை காப்பாற்ற அவர் மனைவி பவித்ரா அரசு தேர்வுகளுக்கு தாயாராகி வந்திருக்கிறார். இதற்காக திருச்சியிலுள்ள தனியார் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
கொரோனா காலம் என்பதால் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பயிற்சி பெற்ற வந்த பவித்ரா சில மாதங்களாக ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்துள்ளார். இதில் ஒரு கட்டத்தில் கணவன் உலகநாதனுக்கு சந்தேகம் ஏற்படவே இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலையில் உலகநாதன் தாயார் இந்திராணி, மகன் உலகநாதனையும், மருமகள் பவித்ராவையும் தொடர்பு கொள்ள போன் செய்துள்ளார். ஆனால் இருவரும் அவருடைய போனை எடுக்கவில்லை. எனவே இந்திராணி, உலகநாதன் பக்கத்து வீட்டிலுள்ள உறவினார் லட்சுமி வீட்டிற்கு போன் செய்து, தன் மகன் வீட்டை பார்க்க கூறியுள்ளார்.
வீட்டின் கதவு பூட்டி இருக்கிறது என்று சொல்லவும், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்குமாறு கூறியுள்ளார் இந்திராணி. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பவித்ராவும், கலைச்செல்வியும் இறந்து கிடந்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை கொலை செய்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு தப்பிய உலக நாதனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த பவித்ரா வேறு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் 23ம் தேதி இரவு மனைவி பெட்ரூமுக்கு அழைத்து சென்று நள்ளிரவில் கொலை செய்து விட்டு, பின்னர் தூங்கி கொண்டிருந்த மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, இரண்டரை வயது மகளை தூக்கிக் கொண்டு தப்பி ஓடி உள்ளார் உலகநாதன் என்று தெரியவந்துள்ளது.
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்ததில், குழந்தையை தூக்கிக்கொண்டு உலகநாதன் செல்வது பதிவாகியிருக்கிறது.