எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… காதல் கணவன், மாமியார் நகை கேட்டு டார்ச்சர் !- இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

 

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… காதல் கணவன், மாமியார் நகை கேட்டு டார்ச்சர் !- இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், நகைக் கேட்டு மாமியார் டார்ச்சர் செய்ததால் மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சந்திரகுமார்-சத்தியவாணி தம்பதிக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள். மூத்த மகள் தீபிகா (19) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தீபிகாவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனிடையே, கடந்த மே 8 ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய தீபிகா பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மகளை காணவில்லை என்று பல்லாவரம் காவல் நிலையத்தில் தீபிகாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீபிகா தனது காதலர் பிரசாந்த் உடன் இருப்பது தெரியவந்தது. இருவரும் மே மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இருவரும் திருமண வயது நிரம்பியவர்கள் என்பதால் தீபிகாவை பிரசாந்த் உடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, உன் பெற்றோரிடம் நகையை வாங்கி வருமாறு பிரசாந்தின் தாயார் தீபிகாவை நச்சரித்துள்ளார். இதனால், தனது தாயார் வீட்டுக்கு சென்ற தீபிகா நகையை கேட்டுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட மகளின் மீது கோபத்தில் இருந்த பெற்றோர், நகையை கொஞ்சநாள் கழித்து தருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் ஆடி மாதத்தை ஒட்டி கடந்த 20-ஆம் தேதி தீபிகா தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கணவரின் நடவடிக்கை சரியில்லை என்றும், மாமியார் நகை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தீபிகா தாயிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். ஆடி மாதம் முடிந்து செல்லும்போது நகை போட்டு அனுப்புகிறேன் என்று கூறி தீபிகாவை சமாதானம் செய்துள்ளார் தாயார்.

கடந்த 31ம் தேதி தீபிகா இருந்த அறையை திறந்துள்ளார் தாயார். அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா சடலமாக கிடந்ததைப் பார்த்து கதறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பல்லாவரம் காவல்துறையினர், சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 3 மாதத்தில் இளம்பெண் இறந்ததால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.