நாளைக்குள் நீக்க வேண்டும்… பா.ஜ.க-வுக்கு இறுதி கெடு விதித்த சுப்பிரமணியன் சுவாமி!
பா.ஜ.க ஐடி விங் தலைவரை நாளைக்குள் நீக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்று பா.ஜ.க தலைமைக்கு சுப்பிரமணியன் சுவாமி இறுதி கெடு விதித்துள்ளார்.
பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கட்சிக்குள் இருந்து கொண்டே மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். சுப்பிரமணியன் சுவாமியை எதிர்க்கட்சியினர்
எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ, அதை விட அதிகமாக சொந்த கட்சியின் ஐ.டி.விங் தலைவர் அமித் மால்வியா விமர்சித்து வருகிறார். இதனால், இவர்கள் இருவருக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
By tomorrow If Malaviya is not removed from BJP IT cell (which is my five villages compromise proposal to Nadda) it means the party brass does not want to defend me. Since there is no forum in the party where I can ask for cadre opinion, hence I will have to defend myself.
— Subramanian Swamy (@Swamy39) September 9, 2020
பா.ஜ.க ஐ.டி விங் கட்சிக் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுவதாகவும், பா.ஜ.க உறுப்பினர்கள் சிலர் போலியாக ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி தன்னை பற்றித் தகாத வார்த்தைகளால் விமர்சித்து வருவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று அவர் பா.ஜ.க தலைவர் நட்டாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து ட்வீட் பதிவு வெளியிட்டுள்ளார். மகாபாரத்தில் வரும் ஐந்து கிராமங்களையாவது கொடுங்கள் என்று கேட்பது போல கோரிக்கை விடுத்துள்ளேன் என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
அதில், “பா.ஜ.க ஐ.டி செல்லிலிருந்து நாளைக்குள் மால்வியா
நீக்கப்படாவிட்டால், கட்சி என்னைப் பாதுகாக்க விரும்பவில்லை என்று அர்த்தம் ஆகிறது. தொண்டர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கட்சிக்குள் இல்லாத நிலையில், என் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி என்னைத் தற்காக்கும் நடவடிக்கையை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கு 1999ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்தது போல மோடி அரசைக் கவிழ்ப்பீர்களா என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, “மோடி அரசைக் கவிழ்க்க வேண்டும் என்றால் எனக்கு 272 எம்.பி-க்கள் தேவை. அப்படி நடந்தால் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.பி-தான் இருப்பார். எனவே பணத்துக்காக எழுதப்பட்ட கட்டுரைகளை வைத்துக்கொண்டு வேடிக்கையான கேள்விகளைக் கேட்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.