சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!
இந்தியாவின் சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்தியாவில் இருக்கும் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளை சட்டத்துக்கு புறம்பாக திருடிச் சென்று, அமெரிக்காவில் விற்பனை செய்து வந்தவர் சுபாஷ் சந்திர கபூர். இங்கிருந்து திருடிச் செல்லும் சிலைகள் நியூயார்க்கில் விற்பனை செய்யப்படுவதை அறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், இந்தியாவிடம் சிலைகளை மீண்டும் ஒப்படைக்குமாறு தகவல் அனுப்பியதன் பேரில், சுபாஷ் சந்திர கபூர் சிலைகளை கடத்திச் சென்று விற்பனை செய்தது அம்பலமானது.
இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திர கபூர், தனது உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனு விசாரணையின் போது, இவருக்கு ஜாமீன் கொடுத்தால் தப்பி சென்று விடுவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.