வெபினாருக்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு உங்களை ஏன் நம்பவில்லை? மாணவர்களை உசுப்பேசுத்தும் ராகுல் காந்தி..
வெபினாருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, நீங்கள் வெளி உலகுடன் ஏன் பேச அனுமதிக்கப்படவில்லை மற்றும் மத்திய அரசு உங்களை ஏன் நம்பவில்லை என்று மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சகம் கடந்த ஜனவரியில் மத்திய கல்வி அமைச்சகம் பல்கலைக்கழகங்களுக்கும் வெபினார் தொடர்பாக ஒரு வழிக்காட்டுதல்களை வெளியிட்டது. அதாவது, உணர்ச்சி வயப்படுகிற அல்லது இந்தியாவின் உள் விவகாரங்கள் தொடர்பான சில விஷயங்கள் (எல்லை, நாட்டின் பாதுகாப்பு, ஜம்மு அண்டு காஷ்மீர் உள்பட) தொடர்பாக சர்வதேச வெபினார்கள் கருத்தரங்குகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெறுமாறு பல்கலைக்கழகங்களிடம் மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டது. வெபினார் என்பது ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் கருத்தரங்கு.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ராகுல் காந்தி, தற்போது வெபினார் விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், நீங்கள் வெளி உலகுடன் ஏன் பேச அனுமதிக்கப்படவில்லை என்று தயவு செய்து நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். மத்திய அரசு உங்களை ஏன் நம்பவில்லை? என்று பதிவு செய்து இருந்தார்.
அதனுடன் வெபினார் தொடர்பான வெளியான செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றொரு டிவிட்டில், மக்களின் மனதை கேளுங்கள் என்று இந்தியில் டிவிட் செய்து இருந்தார். மக்களின் எண்ணத்தை கேளுங்க என்று பிரதமர் மோடியை வலியுறுத்துவது போல் அந்த டிவிட் இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.