திருச்சி வேளாண் கல்லூரி விடுதியில் மாணவி விஷம் குடித்து தற்கொலை!
திருச்சி
திருச்சி அருகேயுள்ள அரசு வேளாண் கல்லூரி விடுதியில், ஈரோட்டை சேர்ந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மகள் சௌந்தர்யா (25). இவர் திருச்சி நவலூர் குட்டப்பட்டில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் எம்.எஸ்சி 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த செளந்தர்யாவுக்கு, நேற்று அவரது பெற்றோர் செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக அவர் அழைப்பை ஏற்காததால், சந்தேகமடைந்த பெற்றோர் இதுகுறித்து விடுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தபோது அறைக்கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, விஷம் குடித்ததால் சௌந்தர்யாவின் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், இதுகுறித்து ராம்ஜிநகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவி சௌந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து சௌந்தர்யாவின் தந்தை முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி அறையில் வேளாண் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.