முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இலங்கை தமிழர்கள்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் மு.க ஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இலங்கை தமிழர்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பத்தினருக்கு பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். பழுதடைந்த வீடுகள் ரூபாய் 231 கோடி செலவில் புதிதாக கட்டித்தரப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் நலனுக்காக ஆண்டுதோறும் மூன்று கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும், இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்கள் இனிமேல் ‘மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும் என்றும் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை அறிவித்தது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்த இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் அவருக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.