உலகக்கோப்பையில் இந்தியாவை பந்தாடிய தென்னாப்பிரிக்கா; பதிலடி கொடுக்குமா இந்தியா? உண்மையை கூறும் வரலாறு இதோ!?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, உலககோப்பையில் தங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, உலககோப்பையில் தங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.
12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இந்த போட்டியில், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.
அந்த வகையில் இந்திய அணி – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை இன்று சந்திக்கவுள்ளது. இங்கிலாந்தின் சௌத்தாம்டன் நகரில் நடக்கும் இந்த போட்டியானது, இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இதுவரை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 4 உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளது. அதில் தென் ஆப்பிரிக்கா 3 முறையும் இந்தியா ஒரு முறையும் வென்றுள்ளது. அது குறித்த தகவலை தான் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
1992 ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில், கடைசி ரவுண்ட் ராபின் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இருப்பினும் ஆட்ட நேரத்தில் மழை குறுக்கிட்டதால், போட்டியின் மொத்த ஓவர் 30 ஆக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த் இந்திய அணியின் அசாரூதின் மற்றும் கபில் தேவ்வின் நிதானமாக ஆடி, 6 விக்கெட்டு இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டனர்.
1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் களம் கண்டன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராகுல் டிராவிட் – கங்குலி ஜோடி அதிரடியாக ஆடி 130 ரன்கள் குவித்தது. இறுதியில் இந்திய அணி 254 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணியே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ரசிர்கள் பெற்றனர். ஆனால் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றிய காலிஸ் மற்றும் பவுச்சர் ஜோடி தென்னாப்பிரிக்காவை தங்கள் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற செய்தனர்.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோல்வியே காணாமல் ஆடி வந்த இந்திய அணி நாக்பூரில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய சேவாக் – சச்சின் ஜோடி தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துகளை அடித்து தும்சம் செய்தனர். சேவாக் 76 ரன்களில் ஆட்டமிழக்க, சச்சின் சதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது.
பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் மற்றும் டூபிளசிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தைப் பரிசாக அளித்தது. இந்த போட்டியில் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றி இருந்தாலும் தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் வடுவாகவே இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவை வீழ்த்த முடியாமல் திணறி வந்த இந்திய அணி 2015 ஆம் ஆண்டு மெல்போர்னில் மீண்டும் பலப்பரீட்சை நடத்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி , தவான் ரஹானே மற்றும் தோனியின் ஆகியோரின் அனல் பறக்கும் ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா அணி. இருப்பினும் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சைக் கண்டு திக்குமுக்காடிப் போயினர். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 177 ரன்களில் இந்தியாவிடம் சுருண்டது. உலக கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியை இந்தியா வீழ்த்தியது அதுவே முதல் முறையாகும். அதனால் இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இப்படியான நீண்ட வரலாறு இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவை களம் காணும் கோலி தலைமையிலான இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யுமா? அல்லது ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே பரிசளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.