கோப்பையை வெல்வது யார்? - நாளை இறுதிப்போட்டி!
Mar 8, 2025, 19:41 IST1741443096171

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. துபாயில் உள்ள மைதானத்தில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. எந்தவித தோல்விகளையும் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதே வேளையில் லீக் போட்டியில் இந்தியாவுடன் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி அதிற்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.