சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி - 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை, மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆக.10 வரை நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ஒன்று கூட இந்தியாவில் நடந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் இந்தியா வென்றுள்ளது. முதலில் 2022 செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நிலவும் அசாதாரண போர்ச்சூழல் காரணமாக பின்னர் ரஷ்யாவில் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது.
அத்துட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 8 முறை தங்கம் வென்றுள்ள ரஷ்யாவுக்கும், உக்ரைன் அண்டை நாடான பெலாஸுக்கும் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவார் என்றும், கிராண்ட் மாஸ்டர் பிரவீன் திப்சே அணியை வழிநடத்துவார் என்றும் தெர்விக்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் அணிக்கு ஸ்ரீநாத், ஆர்பி ரமேஷ் ஆகிய இருவரும், மகளிர் அணிக்கு அபிஜித் குண்டே, ஸ்வப்னில் ஆகியோரும் பயிற்சியாளராக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடவர் பிரிவில் அணி A ல், 1. விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, 2. ஹரி கிருஷ்ணா, 3. அர்ஜுன் , 4. எஸ்.எல். நாராயணன், 5. சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோரும், இரண்டாவது ( B )அணியில், 1. நிஹல் சரின், 2. குகேஷ், 3. அதிபன், 4. பிரக்ஞானந்தா, 5. சத்வனி ரனாக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் மகளிர் பிரிவில் முதல் (A) அணியில், 1. கொனேரு ஹம்பி, 2. ஹரிகா, 3. ஆர். வைஷாலி, 4. தானியா சச்தேவ், 5. குல்கர்ணி பக்தி ஆகியோரும், இரண்டாவது ( B) அணியில் 1. வந்திகா அகர்வால், 2. செளம்யா சுவாமிநாதன், 3. கோம்ஸ் மேரி ஆன், 4. பத்மினி, 5. திவ்யா தேஷ்முக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.