பதிலடி கொடுக்குமா இந்தியா ? - நாளை 2வது டி20 போட்டி

 
ind vs aus

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நேற்று முன் தினம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 208 ரன்கள் குவித்த போதிலும் பந்துவீச்சில் கோட்டை விட்டதால் தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் அந்த இமாலய இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளது. நாளைய போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணியில் சேருவார் என எதிர்ப்பார்க்கப்படுவதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.