வேதனை தரும் தோல்வி... வலிமையுடன் மீண்டு வருவோம் - சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை

 
suryakumar

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி, வேதனை தரும் தோல்வி எனவும், நாங்கள் வலிமையுடன் மீண்டு வருவோம் எனவும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.  

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு ஓவலில் நேற்று நடைபெற்ற  2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்கள் எடுத்தார்.இதை தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களம் புகுந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 


இந்த நிலையில் தோல்விக்கு பிறகு  சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வேதனை தரும் தோல்வி. நாங்கள் எங்கு விளையாடினாலும் பரவசமான சூழலை உருவாக்கும் எங்கள் ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அணியினரின் மற்றும் ஆதரவு ஊழியர்களின் கடின உழைப்பு,, ஒருவருக்கொருவர் இடைவிடாத ஆதரவுக்கு நன்றி. நாட்டிற்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். நாங்கள் வலிமையுடன் மீண்டு வருவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.