மிரட்டிய மில்லர் - கடைசி வரை போராடி வீழ்ந்த இந்தியா

 
miller

டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.  தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது.  கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதை தொடர்ந்து தீபக் ஹூடா டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டது. அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி 4 விக்கெட்களை கைப்பற்றினார். 

Ind vs Sa

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 59 ரன்களும், ஏய்டன் மார்க்ராம் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.