பேட்டிங்கில் அசத்தி வரும் இந்தியா! - ரோகித் சர்மா, சுப்மன் கில் அடுத்தடுத்து சதம்

 
IND

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 21ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டிய இவர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மைதானமும் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. அதிரடியாக ஆடிய இவர்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விரட்டினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். இது ரோகித்துக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 30வது சதமாக அமைந்தது. இதையடுத்து சுப்மன் கில்லும் சதம் அடித்து அசத்தினார்.