காமன்வெல்த் - நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்றார் முரளி ஸ்ரீசங்கர்

 
Murali Srisankar

காமன்வெல்த் வரலாற்றில் முதல் முறையாக நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் கலந்துகொண்டார். இறுதிப் போட்டியில் ஸ்ரீசங்கர் தனது முதல் முயற்சியில் 7.60மீ. தூரமும், அடுத்த இரண்டு முயற்சிகளில் 7.84 மீ தூரமும், ஐந்தாவது முயற்சியில் 8.08 மீட்டர் தூரமும் நீளம் தாண்டி இரண்டாமிடம் பிடித்தார். இதேபிரிவில், கரிபியன் தீவுகளைச் சார்ந்த பஹாமாஸ் நாட்டின் லகுவான் நைர்ன் தங்கப் பதக்கம் வென்றார். இவரும் 8.08 மீட்டர் தூரமும் நீளம் தாண்டி இருந்தார் என்றாலும், இரண்டாவது முயற்சியில் ஸ்ரீசங்கரை விட அதிக தூரம் (7.98 மீ) நீளம் தாண்டியதால் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். காமன்வெல்த் வரலாற்றில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.