விராட் கோலி சதம் விளாசல்....ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு

 
virat

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 212 ரன்கள் குவித்துள்ளது. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு நுழைந்தது. ஏற்கனவே இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியும் தகுதி பெற்றதால் இந்தியாவில் இறுதி சுற்று கனவு தகர்ந்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டதால் இன்றைய ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.  

Virat

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆபிகானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுகிறார். அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் விராட் கோலி களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர்.  கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சுமார் 1020 நாட்களுக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.  61 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.