இந்தியாவை சரிவில் இருந்து மீட்ட சூர்யகுமார் - தென் ஆப்ரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு

 
Ind vs Sa

டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 133 ரன்கள் எடுத்தது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை  வீழ்த்தி நான்கு புள்ளிகளுடன் குரூப்2 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று பெர்த்தில் நடைபெறவுள்ள போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி ஏறக்குறைய உறுதி செய்துவிடும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

Suryakumar


 
இதனையடுத்து தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.  தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது.  கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதை தொடர்ந்து தீபக் ஹூடா டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  

ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டது. அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகி விளையாடி வருகிறது.