விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி - இந்திய அணி 373 ரன்கள் குவிப்பு

 
virat

இலங்கை அணிக்கு எதிரான முதல்  ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 373 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்ற நிலையில் இதில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. டி20 போட்டி தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. 

virat

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக சுப்மன் கில்லும், கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 143 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 70 ரன்னில் அவுட் ஆனார். ரோகித் சர்மா 83 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி அதிரடி ஆட்டத்தால் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 73வது சதத்தை பதிவு செய்தார் கோலி. சதம் அடித்து அசத்திய கோலி 113 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது.