கடைசி வரை போராடி அணியை வெற்றி பெற வைத்த கே.எல்.ராகுல் - தொடரை கைப்பற்றிய இந்தியா

 
ind

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி  3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. நுவானிடு பெர்னாண்டோ மட்டுமே அரைசதம் கடந்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

ind

இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் ரோகித் 14 ரன்னிலும், கில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த கோலி 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஐயர் 28 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த ராகுலும், ஹர்திக்கும் இணைந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹர்திக் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் ராகுல் நிதானமாக விளையாடி அரைசதமடித்தார். 64 ரன்கள் எடுத்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.