நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி - இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

 
ind

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது .நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நேற்று முன் தினம் நடைபெற இருந்த நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்டது.  

suryakumar

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும், சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. சிறப்பான ஆட்டடத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் வில்லிம்சன் 61 ரன்கள் குவித்தார். கான்வே 25 ரன் எடுத்தார். இதையடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டையும், சாகல், சிராஜ் தலா 2 விக்கெட்களையும், புவனேஷ்குமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்