மைதானத்தில் மோதிக்கொண்ட விவகாரம் - ஐசிசி அதிரடி நடவடிக்கை

 
pak

போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்ற நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அந்த வாய்ப்பை இழந்தது. போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் 19வது ஓவரில் பரீத் பந்துவீச்சில் சிக்சர் அடித்த ஆசிப் அலி, அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பரீத் ஆவேசமாக கத்திய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆசிப் அலி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தனது பேட்டையும் ஓங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடுவர்களும் சக வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. போட்டி கட்டணத்தில் இருந்து தலா 25 சதவீதம் தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.