கோலகலமாக தொடங்கியது காமன்வெல்த் திருவிழா

 
common wealth

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இந்திய தேசிய கொடியை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் ஏந்தி சென்றனர். 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நேற்றிரவு தொடங்கின. இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா, மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படாஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

common wealth


 
இந்நிலையில், 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.  தொடக்க விழா அணிவகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். இதேபோல் இந்திய அணி வீரர்களும் அணிவகுப்பு நடத்திய நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.