காமன்வெல்த் போட்டி : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தகப்பதக்கம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் போட்டியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய அணியின் சார்பில் யாரும் பதக்கங்கள் பெறாத நிலையில், இரண்டாவது நாளான நேற்று இந்தியா தனது வெற்றி கணக்கை தொடங்கியது. முதலில் ஆடவருக்கான 55 கிலோ எடைப்பருவில் இந்தியாவின் சங்கீத் சர்க்கார் வெள்ளி பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆடவருக்கான 61 கிலோ எடை பிரிவு பளு தூக்குதல் போட்டியில், இந்தியாவின் குருராஜா வெண்கல பதக்கம் வென்றார். மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி அவர் 3ம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பருவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவே ஆகும். தொடர்ந்து 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஒரேநாளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளி பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில் தற்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 67 கிலோ ஆடவர் எடை தூக்கும் போட்டியில் 300 கிலோ எடையை தூக்கி இந்திய வீரர் ஜெரிமி லால்ரினுங்கா தங்கம் வென்று அசத்தியுள்ளர். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் ஆகும். இதனையடுத்து 5 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.