காமன்வெல்த் - பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிற்கு 3வது தங்கம்

 
achindha

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி இந்தியாவிற்கு 3வது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார்.

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.  இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ துாக்கிய அசின்டா, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 313 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

இது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 3வது தங்கம் ஆகும். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் இந்தியா பளுதூக்கும் போட்டியில் மட்டும் 6 பதங்கங்களை வென்றுள்ளது. பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்க பதக்கமும், 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதேபோல் ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் சங்கேத் மகாதேவ் சர்க்கார் வெள்ளிப் பதக்கமும், 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி வெண்கல பதக்கமும் வென்றனர். தற்போது அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ள நிலையில், முன்னதாக 63 கிலோ எடைப் பிரிவு பளுதுாக்குதலில், இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.