2025ம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும்.. - ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
2025ம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஐசிசி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொதுக்குழு கூட்டம் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை நடைபெறும் சர்வதேச மகளிர் உலகக்கோப்பை தொடர்களுக்கான பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்படி . 2025ம் ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுக்கு ஒருமுறை நாடாகும் டி20 உலகக்கோப்பை தொடர், 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடைபெறும் என்றும், 2026-ல் இங்கிலாந்தில் நடைபெறும் என்றும் ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது. 2027ம் ஆண்டில், மகளிர் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இதனிடையே 2025ல் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஐசிசி- அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளதால் மகளிர் உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்துவோம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.