டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை

 

டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை

டெல்லி: டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் விமானியான யுவராஜ் தேவதியா இன்று அதிகாலை 1 மணிக்கு தனது அலுவலக காரில் ஃபரிதாபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். தெற்கு டெல்லி ஐ.ஐ.டி அருகே மேம்பாலத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஐந்து பைக்குகளில் 10 பேர் அவரது காரை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து யுவராஜின் கார் கண்ணாடிகளை உடைத்த கொள்ளையர் கும்பல் அவரை தாக்கியதுடன், அவரின் உடைமைகள் மற்றும் 34 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை

அவர்கள் தப்பி செல்வதற்கு முன்பு அந்த கொள்ளைக் கும்பலில் ஒருவன் யுவராஜை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரத்தம் வழிய, வழிய அவர் கிடந்தார். இதையடுத்து யுவராஜ் தன்னுடைய செல்போன் மூலம் போலீசாரை அழைத்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

சமீப நாட்களாக ஐ.ஐ.டி-டெல்லி அருகே இதே முறையில் பலரிடம் கொள்ளை அடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தெற்கு டெல்லியில் உள்ள இப்பகுதி சாலையில் இரவு நேரத்தில் கார்களை குறி வைத்து இந்த கும்பல் கொள்ளையடித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.