சிவசங்கர் பாபாவுக்கு ஆஞ்சியோ செய்தது உறுதியாகியுள்ளது : சிபிசிஐடி தகவல்!
பாலியல் குற்றச்சாட்டில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது சமீபத்தில் பாலியல் புகார்கள் குவிந்தன. இது குறித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினர்.இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் டேராடூனில் தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அங்கு விரைந்த போது அங்கிருந்து சிவசங்கர் பாபா தப்பினார். ஆனால் மொட்டையடித்தபடி அங்கிருந்து தப்பி செல்ல நினைத்த சிவசங்கரை காசியாபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை தமிழகம் அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் அதன் காரணமாக அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது உறுதியானது. மாரடைப்பு காரணமாக டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்றதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளனர். சிபிசிஐடி அலுவலகத்தில் நடந்து வரும் விசாரணைக்கு பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்த உள்ளார். சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பின் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளனர்.